பதிவு செய்த நாள்
30
செப்
2016
12:09
சென்னை: சிலைகள் மண்ணுக்குள் புதைந்தது எப்படி? என்பது குறித்து, சென்னை அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாட்சியர் விளக்கினார். தமிழக தொல்லியல் துறை சார்பில், அறநிலையத்துறை செயல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில், அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர், சிலைப் பாதுகாப்பு குறித்து பேசியதாவது: அந்நியர் படையெடுப்பு தமிழர்கள், ஐம்பூதங்களை வணங்கியதன் தொடர்ச்சியாக, ஐம்பொன் சிலைகள் செய்து வணங்கினர். சிலைகள் செய்ய உருவாக்கப்பட்ட அச்சுகள், சிலை செய்ததும் உடைக்கப்பட்டன. அதனால், ஒவ்வொரு சிலையும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. அக்காலத்தில், அந்நியர் படையெடுப்புகள் அதிகம் இருந்தன. அவர்கள், சிலைகள், நகைகளை கொள்ளையடித்தனர். மேலும், கோவில்களையும் சிதைத்து அழித்தனர். அதேபோல், இயற்கை சீற்றத்திலும் கோவில்கள் சேதமடைந்தன.
தர்ப்பைப்புல்: அதனால், அரசு, கோவில், கிராமத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் கூடி, ஊரின் ஒதுக்குப்புறத்தில், ரகசியமான இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு, 10 அடி ஆழத்தில் குழி தோண்டினர். அதில், ஆற்று மணல், தர்ப்பைப்புல் என, மாறி மாறி அடுக்குகளை அமைத்து, சுவாமி சிலைகளை, தலை கீழாக புதைத்தனர். சிலை மீதும் மணல், தர்ப்பை புல்லை அடுக்கடுக்காக போட்டு மூடினர். நிலைமை சரியான பின், அதே நிர்வாகிகள் கூடி, சிலையை எடுத்து, தேவையான சாங்கியங்களை செய்து, மீண்டும் கோவிலில் வைத்து வழிட்டனர். இவ்வாறு, சுவாமி சிலைகளை மண்ணில் புதைக்க வேண்டிய காரணங்கள், முறைகள் பற்றி, மரிக் சம்ஹிதா நுாலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. போர், அந்நியர் ஆட்சி முடியும் போது, பொறுப்பாளர்கள் இல்லாமல் போவது, கோவில் இல்லாமல் போவது உள்ளிட்ட காரணங்களால், புதைக்கப்பட்ட சிலைகள் எடுக்கப்படாமலேயே இருந்தன. அந்த இடத்தில், வீடு கட்டுதல், உழுதல், மற்றும் மற்ற தேவைகளுக்காக மண்ணை தோண்டும் போது, அந்த சிலைகள் வெளிவருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.