பதிவு செய்த நாள்
01
அக்
2016
10:10
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் கோவில் தசரா திருவிழா, காலை, 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்தியாவில், மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா, தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் நடக்கும். முதல் நாளான (அக்.1)காலை, 7:00 மணிக்கு கொடிப்பட்டம் யானை மீது உலா வந்து, காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. திருவிழா நாட்களில், பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தருவார். தென் மாவட்டங்களில், பக்தர்கள் காப்பு கட்டி, வீட்டை விட்டு வெளியே வந்து, கூரை ஷெட்டுகள் அமைத்து தங்குவர். தினமும் ஒரு வேளை, பச்சரிசி சாதமும், துவையலும் சாப்பிட்டு விரதம் இருப்பர். திருவிழா நாட்களில், தினமும் பக்தர்கள், மாறு வேடங்கள் பூண்டு தெருத் தெருவாக காணிக்கை சேகரிப்பர். காளி, அம்மன் வேடமணிந்து பக்தர்கள் வருகை தருவர். இப்படி சேகரிக்கப்படும் காணிக்கைகள், இறுதி நாளான சூரசம்ஹாரம் முடிந்த பின், கோவிலில் சேர்க்கப்படும்.