பதிவு செய்த நாள்
08
அக்
2016
11:10
விருதுநகர்: திருச்செந்துார் குலசேகர பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவையொட்டி, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பல்வேறு வேஷமிட்டப்படி விருதுநகரில் வீதி உலா வந்தனர். வேஷமிட்டு மக்களை ஏமாற்றுபவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர், அரசு அதிகாரி என தனது வலையை விரிப்பர். இதற்கான கல்வித்தகுதி துளியும் இருக்காது. இதுபோல் வேஷமிடுபவர்கள் பல முறை தப்பினாலும் கடைசியில் சிக்குவது காலத்தின் கட்டாயம். அப்போது தான் கடவுள், தர்மம், உண்மை போன்றவற்றின் வலிமை தெரியும். குடும்ப அமைதி : ஒரு வேஷமிட 40 நாள் விரதமிருந்து, உப்பு இல்லாத தாளிக்காத உணவுகளை சாப்பிட்டு அம்மன் அருள் பெற ,ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி வீதி வலம் வருகின்றனர்.
இதே போல் திருச்செந்துார் அருகே உள்ள குலசேகரபட்டணத்தில் உள்ள முத்தாரம்மன்கோயில் பக்தர்கள், தங்கள் பிரச்னை தீர, வாழ்வு வளம் பெற, குடும்ப அமைதி, நோயில் இருந்து விடுபட , தொழில் சிறக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் முத்தாரம்மன்கோயில் சென்று வேஷமிட்டு வலம் வருவதாக வேண்டிக்கொள்கின்றனர்.
தீயசக்திகள் : அதன்படி அவர்கள் கருங்காளி, செங்காளி, மாரியம்மன், சுடலை மாடசாமி, கருப்பணசுவாமி போன்ற சுவாமி வேஷம், போலீஸ், குறத்தி, அரக்கன், கரடி, புலி போன்ற வேஷமிடுகின்றனர். இவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து லாரி, வேன்களில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை என பல மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள அம்மன் கோயில்களில் மேளதாளத்துடன் வழிபாடு நடத்துகின்றனர். பின் பக்தர்களின் வீடுகளுக்கே சென்று ஆசி அளிக்கின்றனர். வேஷமிட்டு வரும் பக்தர்கள் வீட்டுக்குள் வந்தால் தீயசக்திகள் அழிந்து மங்களம் பெருகும் அமைதியான நல்வாழ்வு கிடைக்கும் என நம்புகின்றனர். விருதுநகர் பகுதிகளில் நேற்று சுவாமி வேஷமிட்டு வந்த குழுவினர் வீதி வலம் வந்தனர். பக்தர்கள் வரவேற்று ஆசி பெற்றனர்.
உப்பு இல்லா உணவு : விருதுநகர் பழனியம்மாள், “எனது மருமகன் கார்த்தீச பெருமாள் முத்தாரம்மன் பக்தர். பல ஆண்டுகளாக குலசேகரபட்டணம் கோயிலுக்கு சென்று வருவார். இந்த முறை காளி வேஷமிட்டு உள்ளார். இதற்காக இரு மாதம் பச்சரிசி சாதம், உப்பு இல்லாத, தாளிக்காத சாப்பாடு சாப்பிட்டு விரதம் இருக்கிறார் ,” என்றார். விருதுநகர் குருசங்கரி, “முத்தாரம்மன் கோயில் நேர்த்திக்கடனுக்கு சுவாமி வேஷமிட்டு வருபவர்கள். வீட்டுக்குள் வந்தால் நல்லது நடக்கும். அவர்களுக்காக பல இடங்களில் அன்னதானம் நடக்கும். வீட்டில் உள்ள தீயசக்திகள் ஒழியும். தொழிலில் முன்னேற எனது கணவர் காளி வேஷமிட்டு உள்ளார். அம்மனின் அருளால் முன்னேறுகிறோம்,” என்றார்.
கருங்காளி வேஷம் : கருங்காளி வேஷமிட்ட பக்தர் வள்ளியூர் காளி, “ பல ஆண்டுகளாக வேஷமிட்டு முத்தாரம்மனை வணங்குகிறேன். மூன்று ஆண்டுகள் குறவன், இரண்டு ஆண்டுகள் காளி, இந்த ஆண்டு கருங்காளி வேஷமிட்டு உள்ளேன். குடும்ப நலன் வேண்டி வேஷமிட்டு வழிபடுகிறேன்,” என்றார். குறத்தி வேஷமிட்ட வள்ளியூர் மணிகண்டன், “நான் பிளஸ் 2 படிக்கிறேன். தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் குணமடைய வேண்டி குறத்தி வேஷமிட்டு முத்தாரம்மனை வழிபடுகிறேன். இதற்காக 41 நாள் விரதம் உள்ளேன்,” என்றார்.
நம்பிக்கை : விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் செய்ய முடியாததை கூட கடவுள் வழிபாடு, கூட்டு பிரார்த்தனை செய்யும் என்ற நம்பிக்கை எல்லோரிடத்திலும் உள்ளது என்பதை, இதன் வழிபாடு மெய்ப்பிக்கிறது.