ராமேஸ்வரம்: நவராத்திரி நிறைவு விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் செப்.30ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு நவராத்தி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்களும் அம்மன் அன்னபூரணி, துர்க்கா, சரஸ்வதி உள்ளிட்ட பல அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிறைவு நாளான நேற்று சூரசம்காரம் நடந்தது. இதற்காக கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பஞ்சமூர்த்திகளுடன் தங்க குதிரை வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் தங்க சிம்ம வாகனத்திலும் புறப்பாடாகி வன்னி நோம்பு திடலில் எழுந்தருளினார். இதையடுத்து மாலை 5:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் வன்னி நோம்பு திடலில் அம்மன் அம்பு எய்து மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது.
கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு 8:30 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடைதிறக்கப்பட்டு அர்த்தசாம பூஜை நடந்தது.