பழநி : பழநி மலைக்கோயிலில் நவராத்திரி விழா அக்.,1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமி விழாவையொட்டி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.
வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும், சாயரட்சை பூஜை முன்னதாக மதியம் 1.30 மணிக்கு நடந்தது. சூரன் வதம் நிகழ்ச்சிக்காக மதியம் 2.30 மணிக்கு பராசக்திவேல் ஊர்வலமாக பெரிய நாயகியம்மன் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, பராசக்திவேல் மற்றும் கேடயம், வில், அம்புடன் செல்ல, அவரை தொடர்ந்து கருடவாகனத்தில் லட்சுமி நாராயணப் பெருமாளும் கோதை மங்கலத்திற்கு சென்றனர். அங்கு இரவு 8 மணிக்கு கோதையீஸ்வரர் ஆலயம்முன் வாழைமரம் மற்றும் வன்னிமரத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திரசுவாமிகள் துர்க்காவாக ஆவாகணமாகி அம்பு எய்து, மகிஷா சூரன் வதம் நடந்தது.