செக்கானுாரணி, செக்கானுாரணி அடுத்து கே.புளியங்குளம் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி ஒரு வாரம் முன்பு பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்தனர். முதல் நாள் மாலை அம்மனுக்கு ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2வது நாள் நிகழ்ச்சியாக தேங்கல்பட்டி, மாயாண்டிபட்டி பொதுமக்கள் பொங்கல் பானைகள், மஞ்சள் நீர் குடங்கள், பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டினர். அப்போது பக்தர்கள் அச்சு வெல்லம், வாழை பழங்களை வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சக்தி கிடா வெட்டப்பட்டது. பின்னர் கே.புளியங்குளம் பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் ஆயிரம் கண் பானைகள் எடுத்தும், மஞ்சள் நீராட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.