பதிவு செய்த நாள்
25
அக்
2016
11:10
விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட, பொது மக்கள் கவனத்துடன் பட்டாசு வெடிக்க வேண்டும் என, தீயணைப்பு துறை, ஆலோசனை வழங்கியுள்ளது. விதிமுறைகளை மீறக்கூடாது என, பட்டாசு வியாபாரிகளும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி என்றாலே பட்டாசு முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது கொஞ்சம் அலட்சியம் காட்டினாலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, கவனமாகவும், பாதுகாப்பாகவும் பட்டாசு வெடித்தால், விபத்தில்லா தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். பட்டாசு வெடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ, வழங்கியுள்ள ஆலோசனைகள் வருமாறு:
கவனம் தேவை
* சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது, பெரியவர்கள் அருகில் இருந்து வழிநடத்த வேண்டும்.
* கம்பி மத்தாப்பை எரித்த பின்பு, தண்ணீரில் போட்டு விட வேண்டும்.
* குடிசைகளின் அருகிலும், கண்ணாடி பாட்டில், தேங்காய் மட்டை, தகர டப்பா ஆகிவற்றிற்குள் பட்டாசுகளை வைத்து வெடிக்கக் கூடாது.
* ராக்கெட், நாட்டு வெடி போன்றவற்றை வெடிக்கக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும் போது, கட்டாயம் வாலியில் தண்ணீர் நிரப்பி அருகில் வைத்திருக்க வேண்டும்.
* கதர் ஆடை அணிந்திருந்தால், தீ விரைவில் பரவாது. செருப்பு அணிந்திருக்க வேண்டும்.
* தீக்காயம் ஏற்பட்டால், உடனடியாக தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
* தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தீயணைப்பு துறை தயார்: புதுச்சேரி, கோரிமேடு, மடுகரை, திருக்கனுார், வில்லியனுார், பாகூர், காலாப்பட்டு, திருபுவனை, சேதராப்பட்டு ஆகிய 9 தீயணைப்பு நிலையங்களில், தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, அரியாங்குப்பத்தில் தற்காலிகமாக தீயணைப்பு வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
தீபாவளி முதல் நாள் முதல் மூன்று நாட்களுக்கு மூன்று மொபைல் தீயணைப்பு வாகனங்கள் இயக்கப்படுகிறது. எந்த பகுதிக்கும் உடனடியாக இந்த வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தீவிபத்து ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.
வியாபாரிகளுக்கு எச்சரிக்கை: எளிதில் தீப்பற்றும் சீன பட்டாசுகள், மேலே சென்று வெடிக்கும் பட்டாசுகளால் அதிகம் தீ விபத்து நடப்பதால், அப்படிப்பட்ட பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தகைய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. தடை செய்யப்பட்டுள்ள பட்டாசுகளை விற்றாலோ, வைத்திருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது. அனுமதி பெற்ற இடத்தின் வரைபடத்துடன் உரிமத்தை கடையில் வைத்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சிறுவர்களை பட்டாசு வியாபாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது. பட்டாசு கடைகளில் புகை பிடிக்க தடை என்ற எச்சரிக்கை பலகை, தீயணைப்பு உபகரணங்கள் வைக்க வேண்டும். கடையை அலங்கரிக்க வண்ண விளக்குகள் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ கூறியுள்ளார். -நமது நிருபர்-