பதிவு செய்த நாள்
25
அக்
2016
12:10
புதுடில்லி: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, பிரபல ஹாஜி அலி தர்காவின் உள்ளே நுழைய, பெண்களுக்கும் அனுமதி அளிப்பதாக, தர்கா நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ளது, ஹாஜி அலி தர்கா. இந்த தர்காவின் உள்பகுதி வரை செல்ல, பெண்களுக்கு இருந்த அனுமதிக்கு, தர்கா நிர்வாகம், 2012ல், தடை விதித்ததை எதிர்த்து, முஸ்லிம் பெண்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த, மும்பை ஐகோர்ட், ’பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்’ என, ஆகஸ்டில் தீர்ப்பு அளித்தது. ’மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என, தர்கா நிர்வாகம் சார்பில் கோரப்பட்டது. அதன்படி, தீர்ப்பை செயல்படுத்த, ஆறு வாரங்கள் தடை விதித்தது, மும்பை ஐகோர்ட். தர்கா நிர்வாகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்கா நிர்வாகம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், ”தர்காவின் உள்பகுதிக்குள் பெண்களையும் அனுமதிக்க நிர்வாகம் முன்வந்துள்ளது. அதற்கான வசதிகள் செய்வதற்கு, அவகாசம் அளிக்க வேண்டும்,” என்று வாதிட்டார்.அதை ஏற்று, நான்கு வாரங்கள் அவகாசம் அளிப்பதாக, சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது. ஹாஜி அலி தர்கா நிர்வாகத்தின் முடிவு, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது; இது, தர்காவில் வழிபட ஆர்வமாக இருந்த, பெண்களுக்கும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் கிடைத்த வெற்றி. திருப்தி தேசாய், தலைவர், பூமாதா ரண்ராகினி அமைப்பு