பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
கோவை: எந்த இடத்தில் விஞ்ஞானம் முற்றுப் பெறுகிறதோ, அந்த இடத்தில் அஞ்ஞானம் துவங்கு கிறது, என, ஸ்ரீ ரகுநாத் தாஸ் மகாராஜ் பேசினார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எளிய தமிழில் அனைவருக்கும் கீதை எனும் தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் அரங்கில் நடந்தது. கடையநல்லுார் விஷ்வ வாரகரி சமஸ்தான் ஸ்ரீ ரகுநாத் தாஸ் மகாராஜ் பேசியதாவது: எது ரகசியமாக வைக்கப்படு கிறதோ அது யாருக்கும் புரியாது. கடவுளை பார்ப்பது ஞானம் அல்ல; அனைவரையும் கடவுளாக பார்ப்பதே ஞானம். ஒருவருக்கு ஞானம் மற்றும் அஞ்ஞானத்தை தருபவர் குரு. அத்தகைய குருவை கடவுளால் மட்டுமே நமக்கு காட்ட முடியும். பிறப்பும், இறப்பும் உடலுக்கு மட்டும் தான். ஞானத்துக்கு இல்லை.
ஞானியை அவரது குணத்தை கொண்டு தான் கண்டறிய முடியும். யாரும் முகம் சுளிக்காத வகையில் வாழ்வது கடினம்; ஞானிகள் அது போன்ற வாழ்க்கையை வாழவே விரும்புகின்றனர். அவரவருக்கு தேவைக்கு ஏற்றாற்போல், அஹிம்சைக்கான கொள்கைகள் மாற்றப்பட்டு விட்டன. அறிவியலால் முடியாத போது தான், கடவுளை திரும்பிப் பார்க்கிறோம். கடவுளை நினைத்த பின் அனைத்தும் சாத்தியப்படுகிறது. எந்த இடத்தில் விஞ்ஞானம் முற்றுப் பெறுகிறதோ அந்த இடத்தில் அஞ்ஞானம் துவங்குகிறது. பிரியத்துடன் கூடிய சத்தியத்தை பேச வேண்டும் என, ஞானிகளுக்கு தெரியும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.