விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 31ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் கந்த சஷ்டியையொட்டி காலை விருத்தகிரீஸ்வரர், அம்மன், சுப்ரமணியர், வள்ளி, தெய்வாணை சுவாமிகளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு 8:00 மணியளவில் சுப்ரமணியர் விருத்தாம்பிகை அம்மனிடம் வேல்வாங்கி, 10:00 மணிக்கு சூரனை சம்காரம் செய்யும் விழா நடைபெற்றது. அதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நேற்று மாலை சுப்ரமணியருக்கும் வள்ளி தெய்வாணைக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.