பதிவு செய்த நாள்
26
நவ
2016
12:11
ஊட்டி: ஜெருசலம் புனிதப் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள், விண்ணப்பங்களை சமர்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி கலெக்டர் சங்கர் அறிக்கை: மாநில அரசின், நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் புனித பயணம் சென்று வர, மாநில அரசால், நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதற்கான பயண முகவர்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில், ஜெருசலேம் புனித பயணக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏற்கனவே, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு, புனிதப் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாசரேத், ஜோர்டான் நதி, கலிலியோ கடல் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய, பிற புனித தலங்களையும் உள்ளடக்கிய, 10 நாட்கள் வரை பயணம் செய்ய முடியும். இப்பயணம் மேற்கொள்ள ஏற்படும் செலவினத்தில், அரசு வழங்கும் நிதியுதவி,
20 ஆயிரம் ரூபாய் நீங்கலாக, மீதமுள்ள தொகையை செலுத்த பயண முகவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்புனிதப் பயணம் அடுத்தாண்டு, பிப்ரவரி முதல் மார்ச் வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரசு திட்டத்தின் கீழ், இப்புனித பயணம் மேற்கொள்ள, விருப்பம் இருந்து இதுவரை விண்ணப்பிக்காத, நீலகிரி மாவட்ட கிறிஸ்தவ மக்கள், அதற்கான விண்ணப்பத்தை, நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தள முகவரியிலும்,பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு, முதன்மை செயலர்/ மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, (5வது தளம்), அண்ணா சாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கு, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் சங்கர் கூறியுள்ளார்.