பம்பை முதல் சன்னிதானம் வரை மருத்துவமனைகளில் வசதிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2016 12:12
சபரிமலை: பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள மருத்துவமனைகளில் இதயநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் செங்குத்தான ஏற்றம் உள்ளது. இதில் செல்லும் போது சிலருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் கேரள அரசின் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.நீலிமலை, அப்பாச்சிமேடு, சரல்குன்று, பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் செயல்படும் மருத்துவமனைகளில், சபரிமலை சுகாதார கட்டுப்பாடு அதிகாரி சுரேஷ்பாபு தலைமையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இங்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காப்பு கருவிகளும், மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சன்னிதானத்தில் உயிருக்கு போராடும் பக்தர்களை பம்பை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.நடப்பு மண்டல சீசன் தொடங்கி 21 நாட்கள் கடந்து விட்ட நிலையில் சராசரியாக எல்லா நாட்களில் 3000 முதல் 3200 பக்தர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். 21 நாட்களில் இதய நோய் தொடர்பாக 6ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். பம்பையில் இருந்து சன்னிதானம் வரும் இரண்டு பாதைகளிலும் 18 அவசர மருத்துவ உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு இதய நோய் தொடர்பான கருவிகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ உதவி மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்.பக்தர்கள் மலை ஏறும் போது இடையிடையே நின்று ஓய்வெடுத்து நிதானமாக மலை ஏற வேண்டும் என்று டாக்டர் சுரேஷ்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.