பள்ளிகொண்டீஸ்வரர், சோமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2025 01:11
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் நேற்று, கார்த்திகை மாத சோமவார பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில், சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவபெருமான் உலகை காக்க விஷம் குடித்து, அன்னை பார்வதி தேவி மடி மீது உறங்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இங்கு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று கார்த்திகை மாத சோமவார பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக, மூலவர் வால்மிகீஸ்வரர், அன்னை மரகதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் பஞ்சாட்சர மலை மீது, மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். கார்த்திகை இரண்டாம் திங்கட்கிழமையான நேற்று காலை, மரகதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு ஸ்ரீகாளிகாபுரம் செல்லாத்தம்மன் கோவில் வளாகத்தில், மரகதேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. அதேபோல், பள்ளிப்பட்டு அடுத்த வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவிலிலும், நேற்று சோமவார உத்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.