மயிலாடுதுறை: நாகை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு காவிரிக்கரையில் சிவ, வைணவ ஸ்தலங்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். காவிரியில் நீர்இல்லாததால் மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கபட்டு,தீர்த்தவாரி நடைபெற்றது.
வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனை போல ஓளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஓளி வழங்க முடியாமல் போனது. இதனையடுத்து தான் இழந்த சக்தியையும், சிவபெருமான் அருளை பெ றவும் குத்தாலத்தில் உள்ள காவிரியில் புனிதநீராடி தவமிருந்து அசுரனிடமிருந்து துன்பம் நீங்கப்பெற்ற நாள் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பது ஐதீகம். அதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத கடைஞாயிறு அன்று சிவ, வைணவ தலங்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையை முன்னிட்டு ஸ்ரீ அரும்பனவனமுல்லை நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர்,ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ ஓம்காளீஸ்வரர், ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சோழீஸ்வரர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகிய 5 ஆலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வீதி உலாவாக வந்து காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். காவிரியில் தண்ணீர் இல்லாமல் தேக்கி வைக்கப்பட்ட நீரில் புனித நீராடியது பக்தர்களை வேதனையடைய செய்தது.