திருவாலங்காடு: வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், வரும், 11ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும். இக்கோவிலில், அடுத்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசனம் ஜன., 11ம் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு விருட்சமான ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, அதிகாலை, 3:00 மணி வரை, விடிய விடிய அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா மற்றும் கோபுர தரிசனமும் நடக்கிறது.