திருக்கோஷ்டியூரில் டிச.,29ல் பகல் பத்து உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2016 01:12
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச.,29ல் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பை முன்னிட்டு டிச.,29ல் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி முடிந்தவுடன் பெருமாள் புறப்பாடாகி ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளுவார். மாலை 6 மணிக்கு ஆஸ்தானம் புறப்பாடு நடைபெறும். 10ம் நாளில் மோகினி அவதாரத்தில் பெருமாள் தென்னமர வீதி புறப்பாடு நடைபெறும். அன்று பகல் பத்து நிறைவடைந்த பின், ஜன.,8ல் வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு காலை 9 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயனத்திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தாயார் சன்னதியில் அருள்பாலிக்கிறார். இரவு 8 மணிக்கு ராஜஅலங்காரத்தில் காட்சி அளிப்பார்.
இரவு 10 .30 மணி அளவில் பரமபத வாசல் திறந்த பின்னர் அதைக் கடந்து ஏகாதசி மண்டபம் சென்று பத்தி உலாத்துதல் நடைபெறும்.மங்களாசாசனம் முடிந்து தென்னமரத்து வீதி புறப்பாடு நடைபெற்று கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து இரவுப்பத்து உற்சவம் துவங்கும். இரவுப் பத்தில் தினசரி மாலை 6 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பிரவேசிப்பார். தொடர்ந்து தென்ன மரவீதி புறப்பாடாகி தாயார் சன்னதியில் எழுந்தருளல் நடைபெறும்.