பதிவு செய்த நாள்
05
ஜன
2017
12:01
கோவை : கோவை இஸ்கான் ஸ்ரீ ஜெகநாத் ரத ஊர்வலத்தை முன்னிட்டு, வரும், 7ம் தேதி போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை இஸ்கான் ஸ்ரீ ஜெகநாத் ரத ஊர்வலம், வரும் 7ம் தேதி மதியம் 2:00 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து, போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டிலிருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் வழியாக அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக சென்று வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவிநாசி ரோடு, பழைய மேம்பாலத்திலிருந்தும், லங்கா கார்னரிலிருந்தும் பாலக்காடு ரோடு செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் பெரியகடைவீதி, வின்சென்ட் ரோடு வழியாக உக்கடத்தை அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பஸ்கள் வழக்கம் போல் டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லலாம். ஆனால், மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, ஒப்பணக்காரவீதி செல்ல அனுமதியில்லை. அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் சுக்கிரவார்பேட்டை வழியாக காந்திபார்க் அல்லது பூமார்க்கெட் வழியாக செல்லலாம்.
தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், ராமமூர்த்தி ரோடு வழியாக சிவாலயா தியேட்டர், பேரூர் பைபாஸ் ரோடு, உக்கடம் வழியாக செல்ல வேண்டும். பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சிவாலயா சந்திப்பு பேரூர் பைபாஸ் ரோட்டில் உக்கடம் அடைந்து அல்லது சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ஆர்.ஜி.,வீதி மற்றும் வைசியால் வீதிக்கு, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை லாரி போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மேலும், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியால் வீதி, கே.ஜி., வீதி ஆகிய ரோடுகளில் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை எந்த வாகனமும் நிறுத்தக்கூடாது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.