பதிவு செய்த நாள்
07
ஜன
2017
02:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் நடைபெறும் ஏகாதசி விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குடிநீர், மருத்துவ வசதிகளுடன், கூட்டத்தை கண்காணிக்க கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன.
துணை ஆட்சியர் அருண் தம்புராஜ் முன்னிலையில், துணை காவல் கண்காணிப்பாளர், கண்ணப்பன், அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, நகராட்சி ஆணையர் பொறுப்பு சேகர் மற்றும் தாசில்தார் கியூரி ஆகியோர் நேற்று மாலை, விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா, வைகுண்ட பெருமாள் கோவில் உட்பட பிற பெருமாள் கோவில்களில் சிறப்பாக நடைபெறும். இதில், வைகுண்ட பெருமாள் கோவிலில், அன்று காலை முதல், இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
இதற்காக, முதல் நாள் சனிக்கிழமை மாலை முதல், நான்கு மருத்துவ குழு சுழற்சி முறையில் கோவில் வளாகத்தில் பணி மேற்கொள்வர். அதே போல், நான்கு, 108 ஆம்புலன்ஸ் மற்றும் கோவில் அருகில், 10 குடிநீர் தொட்டியும், தற்காலிக சிறுநீர் கழிப்பறையும் அமைக்கப்படுகிறது. அன்று கோவிலுக்கு வரும், வி.ஐ.பி.,க்களுக்கு என, தனி, பாஸ் வழங்கப்படவில்லை.