பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
காஞ்சிபுரம்: மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மாடுகளை அழைத்து வந்து, கிராமவாசிகள் வழிபாடு நடத்தி சென்றனர். காஞ்சிபுரம் சுற்று வட்டார கிராமங்களில், மாட்டு பொங்கல் பண்டிகையை , வெகு விமரிசையாக கிராமவாசிகள் நேற்று கொண்டாடினர். மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், அவற்றிற்கு பிடித்த உணவுகளை வழங்கி, சிறப்பு பூஜைகள் செய்து, மாடுகளை வழிபட்டனர். கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு,மாடுகளை அழைத்து வந்து, வழிபாடு நடத்தினர். இதில், பெரும்பாலானோர், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மாட்டு வண்டியில் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். அவ்வாறு நேற்றும் ஏராளமானோர் மாட்டு வண்டியில் வந்து வழிபாடு நடத்தி, சென்றனர். கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகள் மாட்டு வண்டியில் அமர்ந்து கொண்டு, ஊர் முழுவதும், ’பொங்கலோ பொங்கல்’ என, கூறிய படி வருவர். இவ்வாறு ரோந்து வரும் மாடுகளை அலங்காரம் செய்து, அதன் கொம்புகளில்
பலுான், ரிப்பன் கட்டி அழைத்து வருவர். ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடத்தி, அங்கு வழங்கப்படும் குங்குமத்தை மாட்டின் நெற்றியில் இட்டு, மீண்டும் ஓட்டிச்சென்றனர்.