சபரிமலை சபரிமலையில் மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் இன்று காலை 10.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. நாளை இரவுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்படும். சபரிமலையில் கடந்த டிச.30-ம் தேதி மாலையில் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கியது. 31-ம் தேதி அதிகாலையில் தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று காலை 10.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் நெய்யபிஷேகம் கிடையாது. தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் களபாபிஷேகம் நடைபெறும். நாளை 19-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு பத்து மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. 20-ம் தேதி காலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,12-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும்.