பதிவு செய்த நாள்
19
ஜன
2017
03:01
தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் தேவர்களுக்கு பகல் காலம். இதனை, உத்தாரயண புண்ணிய காலம் என்பர். அதேபோல், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவுப் பொழுது. இதனை, தட்சிணாயன புண்ணிய காலம் என்பர். அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதாவது விடியற்காலை நேரம். இந்தக் காலகட்டகத்தில் பல நிகழ்வுகள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தது மார்கழியில்தான். அப்போது பாற்கடலில் முதலில் ஆலகால விஷம் தோன்றியது. அதனை, உலகம் உய்ய சிவபெருமான் உட்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பாற்கடலிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள். அவள், மகாவிஷ்ணுவைத் திருமணம் புரிந்தது மார்கழியில்தான். பாரதப் போர் நடந்தது மார்கழியில் தான். ஆண்டாள் நாச்சியார், கண்ணனையே மணாளனாக அடைவேன் என்று நோன்பு மேற்கொண்டு பாசுரங்கள் பாடியதும் மார்கழியில்தான். நோன்பு மேற்கொண்டதன் பலனாக, தான் விரும்பியதை பெற்ற ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதருடன் ஐக்கியமானது மார்கழியில்தான். சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனமும், பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதும் மார்கழியில் தான்.