பதிவு செய்த நாள்
24
பிப்
2017
11:02
சிவ தத்துவத்திற்கு உயிரூட்டும் சிவராத்திரி என்ற சுப ராத்திரி, மெய்யுணர்வின் மிக அழகிய அம்சத்தை பிரதிபலிக்கிறது. சிவன், ஒரு நபரோ அல்லது ஒரு உருவமோ அல்ல; அனைத்தின் சாரத்தையும் உள்ளடக்கிய நித்திய தத்துவம். இது, அனைத்தும் பிறந்து, அனைத்தும் கரைந்து, அனைத்தும் மறையும் ஒரு கொள்கை. இவ்வளவு நுட்பமான, ஆயினும் உணரக்கூடியதாக உள்ள, இந்த தத்துவத்தை எப்படி வெளிப்படுத்துவது? மொத்தத்தில் இருப்பின் மிகவும் நேர்த்தியான மற்றும் புரிந்து கொள்ள முடியாத உள்ளடுக்கு வெளிப்பாடுகளில் ஒன்று, நடராஜர் அல்லது பிரபஞ்ச நடனக் கலைஞர் என, சித்தரிக்கப்பட்டுள்ள சிவன். நடராஜர் என்பது, படைப்பில் பொருள் மற்றும் ஆன்மீக பகுதிகளுக்கு இடையேயான ஒரு கண்கவர் சின்னமாக உள்ளது. நடராஜரின், 108 நடன தோற்றங்களில் மிகவும் போற்றப்படும் தோற்றம் ஆனந்த தாண்டவம். பேரின்பம் நடனம். அழகு, நேர்த்தி, கருணை ஆகியவற்றுடன் காணப்படும் ஆனந்த தாண்டவம், ஈடு இணையற்றதாகவே உள்ளது. ஆழமான ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் பொருளுலகின் பற்றின்மை போன்றவற்றின் மூலம், ஒருவர் இம்மாயப் பகுதிகளை அணுகும் போது, ஆனந்த தாண்டவத்தை அனுபவிக்க முடியும். இருப்பில், பல பரிமாணங்கள் உள்ளன. படைப்பின் நுட்பமான பகுதிகளுக்குள் நுழைய முடிந்த ஒருவர், சிவ நடனம் ஒரு முடிவில்லாத தொடராக நடப்பதைக் கண்டறிகிறார். பிரபஞ்ச தாள லயத்தில் இப்பேரின்ப நடனத்தை மட்டுமே, உடல், மனம், புத்தி மற்றும், தான் என்ற, அகந்தைச் சிக்கல் போன்றவற்றை கடந்த பின்னரே, அனுபவித்து மகிழ முடியும். சிவன் மனித உருவமெடுத்து, இப்பூமியில் நடமாடியதாக தவறாக நம்பப்பட்ட போதிலும்- சிவன் அநாதி: பிறப்பற்றவர், அனந்தா: இறப்பற்றவர். சிவனை காலம் மற்றும் இடத்திற்குள் ஒரு உருவமாகக் கட்டுப்படுத்துவது எங்கும் வியாபித்திருக்கும் மற்றும் எல்லையற்ற பேரறிவாகிய நித்திய தத்துவத்தைக் குறைவாக மதிப்பிடுவதாகும்.
நடராஜரின் வலதுபுற மேற்புறக் கையிலுள்ள தமரு, எல்லையற்றமையைக் குறிக்கும் வடிவில் (∞) அமைந்துள்ளது. இது, ஒலி மற்றும் வெற்றிடம் ஆகியவற்றையும், பிரபஞ்சத்தின் விரிந்து சுருங்கும் நிலையைக் குறிக்கும் சின்னமாகவும் அமைந்துள்ளது. வரையறுக்கப்பட்டதாக இருந்த போதிலும், ஒலி மூலம் எல்லையற்றதைக் காண முடியும். நடராஜரின் இடது கையின் மேற்புறத்திலுள்ள, நெருப்பு பிரபஞ்சத்தின் ஆதி மூலமான ஆற்றலைக் குறிக்கிறது. ஆனந்தம் ஆற்றலை மேம்படுத்தும், இன்பங்கள் ஆற்றலைக் குறைக்கும். அபய முத்திரையில் உள்ள வலது கையின் கீழ்ப்பகுதி பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு முறையாக்கத்தின் உத்திரவாதத்தை குறித்துக் காட்டுகிறது. அடுத்த கை கீழ் நோக்கியிருப்பது, எல்லையற்ற சாத்தியங்களைக் காட்டும் அறிகுறியாகத் திகழ்கிறது. பாதங்களுக்கு கீழுள்ள அபஸ்மாரம் என்ற, அசுரன் அறியாமையைக் குறிப்பிட்டு, முயலகப் பீடிப்பு நிலை, அதாவது உயிர்நிலை மற்றும் உடல் மீது முற்றிலும் கட்டுப்பாடு இல்லாத நிலையைக் குறிக்கிறது. அறியாமையின் தளைகளிலிருந்து மனித மெய்யறிவு விடுபட்டு, உடல் மன சிக்கலை ஆளும் தேர்ச்சி பெறும்போது மெய்யின்பம் வாழ்வில் மலரத் துவங்குகிறது. நடராஜரின் ஆனந்த தாண்டவம் படைப்பு அழிப்பு என்ற, பிரபஞ்ச சுழற்சியை குறிக்கிறது. இவ்வுலகம் முழுமையும், மீண்டும் மீண்டும் எழுந்து சுருங்கும் ஆற்றலின் தாளலயமின்றி வேறில்லை.
சூக்ஷும ஜகத் அல்லது மிக நுண்ணிய அடுக்குகளிலேயே தேவர்களைக் கண்டுணர முடியும். தியானத்தில் மிக ஆழ்ந்த நிலையை அடைந்தவர்கள், இந்த நுாதன நிகழ்வை கண்டறிந்திருக்கின்றனர். தேவ அப்ராக்ரத திவ்ய மனுஷ ரூபா அதாவது பொருளற்ற ஒளியுடல்களில் உள்ள தேவர்கள், மனித உடல்களில் மனிதர்களால் கண்டறியப் பட்டிருக்கின்றனர். வெளியே நாம் காணும், தெய்வீகத்தின் பல்வேறு வடிவங்கள் அக்கால முனிவர்கள் தியானத்தில் கண்டறியப்பட்டவையே. முனிவர்களின் உள்ளார்ந்த அனுபவங்களை, மிக அழகிய வடிவங்களில், ஆலயங்களிலும் கலையுணர்வுள்ள இந்திய நிலப்பகுதிகளிலும் காணலாம்.தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் ஆலயம், நடராஜரின் பிரபஞ்ச ஆற்றலை அற்புதமாக உருவமைக்கும் கோவில். சிதம்பரம்,- சித் அதாவது மெய்யுணர்வு மற்றும், அம்பர் அதாவது வெற்றிடம்- என்பது உணர்வூட்டும் மெய்யுணர்வைக் குறிப்பதாகும். சிவனின் நித்திய நடனம் பூமியில் ஒருபோதும் நிகழவில்லை. அது, எப்போதுமே மெய்யுணர்வு மேடையிலேயே இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிதம்பரம் கோவிலின் மூலஸ்தானக் கூரையில், 21 ஆயிரத்து, 600 தங்க ஓடுகள் வேயப்பட்டிருக்கின்றன. அவை, ஒரு மனிதன் ஒரு நாளில் எடுக்கும் மூச்சுக்களைக் குறிப்பிடுகின்றன. எங்கும் நிறைந்திருக்கும் சிவதத்துவத்தை,சர்வம் சிவமயம் ஜகத் அதாவது, இவ்வுலகிலுள்ள அனைத்துமே சிவனின் வெளிப்பாடு என, வேதமறைகள் துதிக்கின்றன. சாதாரண இயல்பு வாழ்விலிருந்து மேலெழுந்து எல்லையற்றதன் புகழில் மற்றும் களங்கமற்ற பேரின்ப சிவதத்துவத்தில் திளைத்திருக்க ஏற்பட்டிருக்கும் தனித்துவம் வாய்ந்த நேரம் சிவராத்திரி. சிவ வழிபாட்டில் பல்வேறு விரிவான வழங்கல்கள் அறியப்பட்டாலும், மிகச் சிறந்த அர்ப்பணிப்பு புஷ்பங்களாக அறிவு, மன அமைதி மற்றும் சமாதானம் என்றே கூறப்படுகிறது. சிவ தத்துவத்தை ஒருவருக்குள்ளேயே கொண்டாடுதல் உண்மையான சிவராத்திரியாகும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்