பதிவு செய்த நாள்
25
பிப்
2017
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மஹா சிவராத்திரி விழாவில், கோவில் வளாகம் முழுவதும், லட்சம் தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிப்24, அதிகாலை நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, மூலவர்
சன்னிதியில், பூக்களால் லட்ச்சார்ச்சனை செய்தனர். மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், உப்புகளில் வண்ண பொடி கலந்து, சிவபெருமான், பராசக்தி அம்மன், இடைக்காட்டு சித்தர், அர்த்தநாரீஸ்வரர் உட்பட, பல்வேறு வடிவங்களில் உருவம் வரைந்து, அதை சுற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இது போன்று, கோவில் வளாகம் முழுவதும், லட்சம் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இரவு, 8:30 மணிக்கு, முதல் கால பூஜை; 11:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை; நள்ளிரவு, 12:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை; அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி கருவறைக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள, லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மஹா சிவராத்திரி உருவான கோவில் என்பதால், கோவில் கலை அரங்கத்தில், மாலை, 6:00 மணி முதல், விடிய விடிய தேவார பாடல்கள், இன்னிசை, பரதநாட்டியம் மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரில், 108 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி நடந்தது.