பதிவு செய்த நாள்
01
மார்
2017
01:03
சின்னாளபட்டி;சின்னாளபட்டி கடைவீதியில் உள்ள காமைய(காமன்)சுவாமி கோயில், திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடத்தப்படுகிறது. சிறப்பு பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, தினம் ஒரு கட்டளைதாரர் வீதம் 15 நாட்களுக்கு வழிபாடு நடக்கும். தினமும், கட்டளைதாரர்கள் வழங்கும் பலவித பூக்களால் விதவிதமான அலங்கார, ஆராதனைகள் நடைபெறும். நிறைவாக, பவுர்ணமியன்று காமன் தகன விழா நடக்கும். இந்தாண்டுக்கான விழா, நான்கு வழிச்சாலை பிருந்தாவனம் தோப்பில், மூன்றாம்பிறை தரிசனத்துடன் துவங்கியது. முன்னதாக, பேக்கரும்பு, மா, ஆமணக்கு, அரசு, அரளி இலை, பூக்களால் சுவாமி அலங்கரித்தல் நடந்தது. பிறை தரிசனத்தைத்தொடர்ந்து, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோயில் பீடத்தில் சுவாமி ஊன்றுதல் நடந்தது. பின்னர் நடந்த விசேஷ ஆராதனையில், சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். வரும் பவுர்ணமியன்று (மார்ச் 12) காமன் தகன விழா நடைபெறும் வரை, சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.