குளித்தலை: கடம்பர்கோவிலில் நடந்த தேர்த்திரு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குளித்தலை அடுத்த, கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர் கோவிலில், மாசித் திருவிழா முன்னிட்டு, தேரோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்றனர். திருத்தேர் மதியம், 12:45 மணியளவில் நிலையை வந்தடைந்தது. பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, இரவு, 7:00 மணியளவில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை, 7:30 மணியளவில், சுவாமி திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா, காவிரியாற்றில் தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.