பதிவு செய்த நாள்
13
மார்
2017
12:03
பூந்தமல்லி: பண மதிப்பு இழப்பை, நாட்டு நலனுக்காக, மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை, வட மாநில தேர்தல் வெற்றி நிரூபித்துள்ளது, என, பா.ஜ., மூத்த தலைவர், இல.கணேசன் எம்.பி., கூறினார். ராமானுஜர், 1,000வது ஆண்டு விழாவை ஒட்டி, பூந்தமல்லியை அடுத்த, அகரம்மேல் முதலியாண்டார் கோவிலில் இருந்து, ஸ்ரீபெரும்புதுாருக்கு பாத யாத்திரை மற்றும் ரத ஊர்வலம் நடந்தது. அதில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், என்.கோபாலசாமி, இல.கணேசன் எம்.பி., ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பாத யாத்திரையை, இல.கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது: ராமானுஜரின், 1,000வது ஆண்டு விழா, தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நிறைவு விழாவை, மிக பிரம்மாண்டமாக நடத்தவும், அதில், பிரதமர் மோடியை பங்கேற்க அழைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஐந்து மாநில தேர்தலில், அபரிமிதமான வெற்றி அடைந்திருக்கிறோம்; உத்தர பிரதேசம் வெற்றி குறிப்பிடத்தக்கது. பண மதிப்பு இழப்பு விவகாரம், தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றனர்; சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மை. நாட்டு நலனுக்காக, மக்கள் அதை ஏற்றுக் கொண்டனர் என்பதையே, இந்த வெற்றியின் மூலம் தெரிவித்து உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மாநில தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்த பிறகு, மாநில தலைவர், இது குறித்து அறிவிப்பார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருகிறது. மீனவர் கொல்லப்பட்டது வருந்தத்தக்கது; இது குறித்து, மத்திய அரசு, இலங்கை துாதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசும் விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது. இரு நாட்டு மீனவர்களும் பேச்சு நடத்தி, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.