பதிவு செய்த நாள்
15
மார்
2017
11:03
திருப்போரூர்: கந்தசுவாமி பெருமான், வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம், திருப்போரூரில் நேற்று சிறப்பாக நடை பெற்றது. திருப்போரூரில் உள்ள , பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. அன்றிலிருந்து, தொடர்ந்து நடைபெற்று வரும் விழா நாட்களில், ரதோற்சவம், தெப்போற்சவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று காலை , திருக்கல்யாண உற்சவம் நடை பெற்றது. காலை , 7:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் கந்தசுவாமி பெருமான், உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின், கோவில் சிவாச்சாரியார்களால், திருக்கல்யாணத்திற்கான யாக பூஜைகள் நடைபெற்று, 8:35 மணிக்கு, பக்தர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில், கந்த சுவாமி பெருமான், வள்ளியை மணம் முடிக்கும் வைபவம், சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அதை தொடர்ந்து, சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது. இதில், சுவாமியின் திருக்கல்யாண கோலத்தை கா ண, மாடவீதிகளில் காத்திருந்த உள்ளூர்வாசிகள் பலர், சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். 12 நாட்களாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா, திருக்கல்யாண உற்சவத்துடன், இனிதே நிறைவு பெற்றது.