பதிவு செய்த நாள்
18
மார்
2017
12:03
ஆர்.கே.பேட்டை: தீமிதி திருவிழாவில், நேற்று நடந்த அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் தீமிதி திருவிழா, இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது. நேற்று மதியம், 12:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நடந்தது. திருவிழாவிற்காக, காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ள திரளான பக்தர்களுடன், பகுதிவாசிகளும் கலந்து கொண்டனர். தபசு நிகழ்ச்சிக்காக, நடப்பட்டிருந்த பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து, அர்ச்சுனன் தபசு மேற்கொண்டார். விரதம் மேற்கொண்டிருந்த பெண் பக்தர்கள், அர்ச்சுனனுடன் சேர்ந்து தவத்தில் ஈடுபட்டனர். தெருக்கூத்து கலைஞர்களின் பக்கவாத்தியங்களுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த, தபசு நிகழ்ச்சியை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல், வேடிக்கை பார்த்தனர். தபசு நிகழ்ச்சியின் நிறைவாக, அர்ச்சுனன் வழங்கிய எலுமிச்சம் பழம், பூ உள்ளிட்ட பிரசாதத்தை பெற, பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டனர்.நாளை காலை, 10:00 மணிக்கு, பதினெட்டாம் போர்க்களம் நிகழ்ச்சியான துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடக்கிறது. வரும் திங்கட்கிழமை காலை, தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் தீமிதி திருவிழா உற்சவம் நிறைவு பெறுகிறது.