பதிவு செய்த நாள்
21
மார்
2017
12:03
வெண்ணெய்மலை: கடும் வெயில் காரணமாக, வெண்ணெய்மலை முருகன் கோவிலில், பக்தர்கள் படியேற முடியாமலும், தண்ணீர் இன்றியும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும், கிருத்திகை நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு அதிகம் வருவர். அதேபோல் பங்குனி உத்திரம் அன்று, ஆயிரக்கணக்கானோர் கூடி முருகனை தரிசிப்பர். தேரோட்டமும் நடக்கும். தற்போது வெயில் சுட்டெரிப்பதால், கோவில் மேல் செல்லும் படிகளில் சூடு தாங்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். படிக்கட்டுகளின் ஒரு புறம் பக்தர்கள் ஏறி செல்வதற்கு பச்சை விரிப்பு போடப்பட்டுள்ளது, மறுபுறம் இறங்கி வருவதற்கு, விரிப்பு இல்லாததால் பக்தர்கள் தவிக்கின்றனர்.
குடிநீர் தொட்டி பயனில்லை: அதேபோல், கோவில் முன் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக இதில் நீர் இல்லாததால், பக்தர்கள் தவிக்கின்றனர். அன்னதான திட்டம் கோவிலில் நடப்பதால், பக்தர்கள் குடிநீர் அருந்தவும், கை கழுவ முடியாத நிலையில் உள்ளனர். கோவில் நிர்வாகம் சார்பில், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.வெண்ணெய்மலை முருகன் கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், வெண்ணெய்மலை முருகன் கோவிலுக்கு வரும், பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இப்பிரச்னைகளை கவனத்தில் கொண்டு விரைவில் தீர்க்கப்படும், என்றனர்.