“பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தால் எத்தனையோ பெரிய நன்மைகள், அற்பக் காரியங்கள் ஆகிவிடுகின்றன. அதேநேரம் பரிசுத்த நினைவுடன் செய்யப்படும் சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன,என்கிறார் நபிகள் நாயகம். மேலும், செயல்கள் எல்லாம் அதன் எண்ணத்தைப் பொறுத்தே நடைபெறுகின்றன. உறுதியாக அல்லாஹ் உங்களின் உருவங்களையும், கோலங்களையும், உங்கள் சொத்து சுகங்களையும் பார்ப்பதே இல்லை. அவன் உங்களுடைய உள்ளங்களையும், உங்களின் செயல்களையும் பார்த்தே தீர்ப்பளிக்கின்றான், என்றும் நபிகளார் சொல்கிறார். எண்ணம் மட்டுமல்ல! சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். “இஸ்லாம் சுத்தமுடையதாகும். ஆகவே, நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். ஏனென்றால், சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான். அல்லாஹ் பரிசுத்தமானவன், பரிசுத்தத்தையே விரு ம்புகிறான். அல்லாஹ் மணமுள்ளவன், நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,” என்கிறார் அவர்.