பதிவு செய்த நாள்
28
மார்
2017
11:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு 11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர்.
உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் பிரகாஷ், திருவண்ணாமலை மோகன் அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வு நடந்து வருவதால் பக்தர்கள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் குவிந்து இருந்தனர்.