பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
12:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள வருண லிங்கத்திற்கு மழை வேண்டி, 108 குடம் ஜல அபிஷேகம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடும் வறட்சி ஏற்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகள், வன விலங்குகள், குடிநீரின்றி அவதிப்படுகின்றன. இதனால், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் ஒன்றான வருணலிங்கத்திற்கு, ஜல அபிஷேகம் செய்து வழிபட்டால், மழை வரும் என, அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், அடி அண்ணாமலை கிராமத்தை சேர்ந்த பெண்கள், அக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, 108 நீர் குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வருணலிங்கத்தை சென்றடைந்தனர். பின்னர், இவர்கள் எடுத்து வந்த குடத்தின் நீரை, வருணபகவானை குளிர்வித்து மகிழ்விக்க, ஜல அபிஷேகம் செய்து பூஜை வழிபாடு நடத்தினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பூஜை, ஏற்கனவே, 30ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டதாகவும், அப்போது மழை பெய்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.