பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
11:04
திருத்தணி;அகத்தீஸ்வரர் கோவிலில், நடந்த பிரதோஷ விழாவில், வடூக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அமாவாசை மற்றும் பவுர்ணமி
நாட்களுக்கு முன்னதாக, பிரதோஷ விழா, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.அந்த வகையில், இன்று, அமாவாசையானதால், நேற்று முன்தினம், பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்
பூஜை நடந்தது.மாலை, 4:00 மணிக்கு, கோ பூஜை, காமதேனு பூஜை நடந்தது. பின், வடூக பைரவர், நந்தி மற்றும் சிவபெருமானுக்கு பால், தயிர் மற்றும் அபிஷேக பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் சிவன் - பார்வதி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, கோவில் வளாகத்தை, மூன்று முறை வலம்
வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, சிவபெருமானை வழிபட்டனர். அதே போல், திருத்தணி, நந்தி ஆற்றங்கரையோரம்
உள்ள வீரட்டீஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதா சிவலிங்கேஸ்வரர், அகூர் திருவேட்டீஸ்வரர் உட்பட, திருத்தணி தாலுகாவில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.