பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
01:04
ஒரத்தூர் : ஒரத்தூர் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில், நாளை, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பேரம்பாக்கம் அருகே, ஒரத்தூரில் உள்ளது ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில். இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம், நாளை நடைபெற உள்ளது. முன்னதாக, 24ம் தேதி, காலை 6:00 மணிக்கு, பந்தக்கால் நிகழ்ச்சியுடன் மகா கும்பாபிஷேகம் துவங்கியது.
பின், நேற்று காலை, 8:00 மணிக்கு, கிராம தேவதை பொன்னியம்மன் வழிபாடும், அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் சிலைகள் பிரதிஷ்டையும் நடந்தது. பின், மாலை 6:00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜையும், பூர்ணாஹூதி தீபாராதனையும் நடந்தது.
இன்று, காலை 8:45 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம், ஸ்பரிசாஹூதி தீபாராதனையும் நடந்தது. மகா கும்பாபிஷேக நாளான, நாளை, காலை 8:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதியும் நடைபெறும்.
பின், காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், கோவில் கோபுரங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு, ராதா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில், வீதி உலாவும் நடைபெறும்.