பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
01:04
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று, சுபத்திரை திருக்கல்யாணம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு
அபிஷேகம், மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் இரவு நாடகமும் நடந்து வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று காலை, சுபத்திரை அம்மன் திருமணம் நடந்தது. இதற்காக, கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைத்து, அர்ச்சகர் மந்திரங்கள் ஓத, சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தொடர்ந்து, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். இரவு, 8:30 மணிக்கு, உற்சவர் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.