திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏப்., 24 ல் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. ஏப்., 27 ல் 101 குண்டங்கள், 1,011 கும்பங்கள் வைத்து பிச்சை குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு எட்டாம் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு கோபுரங்கள், விமானங்களுக்கு யாகசாலையிலிருந்து புனித நீருடன் கடங்கள் கொண்டுச் செல்லப்பட்டன. காலை 9:45 மணிக்கு சோமசுந்தர குருக்கள் கொடி அசைத்ததும், சிவாச்சாரியர்கள் கும்பங்களுக்கு புனிதநீரை ஊற்றினர். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மெகா திரைகள் மூலம் 13 இடங்களில் கும்பாபிஷேகம் ஒளிபரப்பப்பட்டது.அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 4:00 மணிக்கு மகாபிஷேகம், இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடந்தன. பரம்பரை அறங்காவலர்கள் நற்சாந்துப்பட்டி அழ.பெரியகருப்பன், காரைக்குடி நா.மாணிக்கவாசகன் பங்கேற்றனர். ஏற்பாட்டை பிள்ளையார்பட்டி கோயில் நகரத்தார் செய்தனர்.