Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவகிரக மண்டலத்திலுள்ள சனிக் கோளின் ... புராணங்களில் சனிபகவானின் சிறப்பு! புராணங்களில் சனிபகவானின் சிறப்பு!
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஜோதிடத்தில் சனிபகவான்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 நவ
2011
12:11

சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடம் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் சாரம் சனி; சூரினிடமிருந்து வெளிவந்தவர்; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. அப்பாவின் சாரம், பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம். அதேபோல், மனதுடன் தொடர்புகொண்டவர் சனி. மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற தமோ குணம் அவரிடம் உண்டு. சூரியனில் (ஆன்மா) இருந்து உருப்பெற்றது சந்திரன் (மனம்). ஆன்மா ஒன்று மனமும் ஒன்று. ஆகவே 12 ராசிகளில் இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால், மற்ற ஐந்து கிரகங்களுக்கு இரண்டு வீடுகள் இருக்கும். ஆன்மா மற்றும் மனத்துடன் புலன்களுக்குத் தொடர்பு உண்டு. ஆதலால் ராசிச் சக்கரத்தில், சிம்மத்தில் உள்ள சூரியனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்குளம். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். சூரியனுக்கு சிம்மராசி. அதற்கு அடுத்த ராசியில், புதன், அதையடுத்து, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். சந்திரனுக்குப் பின் ராசியில், மிதுனத்தில் புதன்; அடுத்து சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். இருவருக்கும் கடைசியில் சனி தென்படுவதால் மகரத்துக்கும் கும்பத்துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார். ஆன்மாவுடன் மனம் இணையவேண்டும் அத்துடன் எண்ணங்கள் இணைந்தால் மட்டுமே, அது வளர்ந்து அனுபவத்துக்கு வரும். ஆன்மா, மனத்துடன் இணைகிறது; மனம், புலனுடன் இணைகிறது; புலன்கள் பொருட்களுடன் இணைகின்றன என்கிறது ஜோதிடம் (ஆன்மாமனஸா ஸம்யுஜ்யதே...). இருக்கிற பொருள், தோற்றமளிக்கும்; வளரும், மாறுபாட்டைச் சந்திக்கும்; வாட்டமுறும்; மறையும். ஆக.... இருத்தல், தோன்றுதல், வளருதல், மாறுபடுதல், வாட்டமுறுதல், மறைதல் ஆகிய ஆறுவித மாறுபாடுகளைக் கொண்ட பொருளுக்கு. எல்லாமே உண்டு. அது மனிதனுக்கும் உண்டு. அதனை ஆறு பாவ விகாரங்கள் என்கிற சாஸ்திரம் (அஸ்தி, ஜாயதெ, வர்த்ததெ, விபரிணமதே, ம்லாயதெ, நச்யதி, இதி. சூரிய - சந்திரனுடன் இணைந்த இந்த ஐந்து கிரகங்கள், ஜீவராசிகளில் தென்படும் ஆறுவித மாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றன எனும் கோணத்தில், ராசிச் சக்கரத்தின் கிரக வரிசைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜோதிடத்தில் சனிபகவான்: மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதியான சனி பகவான் நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே தனுசின் உருவம் கொண்டு மண்டலத்தில் உறைபவர். ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் சத்ருக்கள் - குரு சமமானவர் - சனிக்கு புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகியவர்கள் நண்பர்களாவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிப்பவர். 3,10ம் இடங்களைப் பார்ப்பவர். லக்னத்திற்கு 8ம், 12ம் இடமும் மறைவு ஸ்தானங்களாகும். இவர் மேஷ ராசியில் நீச்சமானவர். துலா ராசியில் உச்சமானவர். சனி தசை பத்தொன்பது வருட காலமாகும். சனியின் அதிதேவதை எமதர்மனாவார். இவருடைய வாகனம் காகம். சில புராணங்களில் இவருடைய வாகனம் கழுகு என்றும் சொல்லப்படுகிறது. இவர் வன்னிய சமித்துக்கு ப்ரீதியானவர். திசைகளில் இவர் மேற்கு முகம் நோக்கி காட்சி தருகிறார். நவதானியத்தில் எள் - மலர்களில் கருங்குவளை - நவரத்தினங்களில் நீல நிறக்கல் - இவருக்கு உகந்ததாகும். மகரம், கும்பம் இரண்டு ராசிகளும் இவருக்கு ஸ்வ÷க்ஷத்ரமாகும். இவருடைய ஆட்சி வீடு மகரம். மூலதிரிகோண வீடு கும்பம். பூசம், அனுஷம், உத்திராட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும், சனியின் சாரம் பெற்ற நக்ஷத்ரங்களாகும். இவர் அன்னிய பாஷைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறார். சுவையினில் சனி கசப்பிற்கும், புளிப்பிற்கும் ஆதிபத்தியம் வகிக்கிறார். வஸ்திர அமைப்பில், சனி கருப்பு பட்டு வஸ்திரத்திற்கு பூஷிதராவார். சனி, காசியப முனிவர் கோத்திரத்தைச் சேர்ந்தவராகிறார். பஞ்சபூத அமைப்பில் சனி ஆகாயத்திற்கு ஆதிபத்தியம் வகிக்கிறார். ஜெனன காலத்தில், சந்திரன் நின்ற ஸ்தானம், ஜெனன ராசியாகும். ஜெனன ராசிக்கு 4ல் சனி சஞ்சரிக்கும் காலம் அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்லப்படுகிறது. ஜெனன ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் காலம் கண்டச் சனி என்று சொல்லப்படுகிறது. ஜெனன ராசிக்கு 8ல் சனி சஞ்சரிக்கும் காலம் அஷ்டமத்துச் சனி என்று சொல்லப்படுகிறது.

ஒன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். சனை என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு. சனி பகவான் ஒவ்வொரு ராசியினருக்கும், அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்ப பலன் தருபவர். அதாவது ஒரு ராசிக்காரருக்கு அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, மங்கு சனி, ஏழரைச்சனி ஆகிய காலங்களில் இவர் கொடுக்கும் பலன் கஷ்டமாகத் தோன்றினாலும்,  இந்த காலகட்டத்தில் அந்த ராசிக்காரரை திருத்தி நல்வழியில் நடக்க வைத்து ராசியை விட்டு விலகும் காலத்தில் மிகச்சிறந்த பலனை கொடுப்பதே சனி பகவானின் நோக்கம். இப்படி ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கும் சனி பகவானை கிரகங்களில் தலைமை நீதிபதி எனலாம். விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர் ! சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.

ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பார்கள் ! இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது - கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது. துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது ! மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோபலமும் குறைகிற இறுதிப்பகுதி. கவுமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம். சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே சனியின் பாதிப்பு மயங்கியது என்பர். இதனால் மங்குசனி என்கின்றனர். இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர். இன்ப - துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர். முதுமையில் சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக்காட்டி, போக்கு சனி என்றனர். ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கின்ற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.

ராசி மண்டலத்தில் வலம் வரும் தருணத்தில், சந்திரன் இருக்கிற ராசியில் இருந்து பன்னிரண்டிலும், சந்திரன் இருக்கிற ராசியிலும், அடுத்து சந்திரனில் இருந்து 2-வது ராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து, பயணிப்பார் சனி பகவான். ஆக, மூன்று ராசியிலும் இருந்த காலத்தைக் கூட்டினால் மொத்தம் ஏழரை வருடங்கள் வரும். இதை, ஏழரை நாட்டுச் சனி என்பார்கள் அதாவது ஏழரை ஆண்டுகளை நாடிய சனி எனப் பொருள். பிறக்கும் வேளையில் சந்திரன் இருக்கும் ராசி, ஒருவரது நட்சத்திரத்தைச் சொல்லும். அத்துடன், அவனது மனத்தையும் சுட்டிக்காட்டும். சனியுடன் மனம் நெருங்கிவரும், சந்திரன் இருக்கும் ராசி; அந்த நெருக்கம் தளர்வது. 2-வது ராசி. இந்த நெருக்கத்தின் தன்மையைக்கொண்டே, மங்கும் சனி, பொங்கும் சனி, போக்குச் சனி என்றும் சொல்லலாம். 12-ல் உள்ளபோது மங்க வைப்பார். சந்திரன் இருக்கும் ராசியில் இருக்கும்போது பொங்க வைப்பார். இரண்டில் இருக்கும்போது, போக வைப்பார். மனதோடு இணைந்த எண்ணங்கள், அதன் தாக்கம் நெருங்கும்போது, இன்பமோ துன்பமோ முழுமையாக வரும். விலகியிருக்கும் வேளையில், தாக்கம் செயலற்றுப் போகும். அதாவது, பன்னிரண்டிலும் இரண்டிலும்... நெருக்கம், மனத்துடன் (சந்திரனுடன் குறைந்திருப்பதால் பாதிப்பானது, அனுபவத்துக்கு வராமலே போகலாம். அந்த ஏழரை வருடகாலத்தில், அவனது தசாபுக்தி அந்தரங்கள் வலுவாகவும் நன்மையை வாரி வழங்குவதாகவும் இருந்தால், சனியின் தாக்கம் செயலிழந்துவிடும். தனக்கு இருக்கும் மூன்று இயல்புகளில் பொங்கும் இயல்பு வெளிப்பட்டு, தசாபுக்தி அந்தரங்களின் தரத்தைப் பொங்க வைத்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார், மாறாக தசாபுக்தி அந்தரங்கள் துயரத்தில் ஆழ்த்தும் நிலையில் இருந்தால், தரத்தையொட்டி மங்கவைப்பதோ அல்லது அதன் உச்சத்தை எட்டவைப்பதோ சனியின் வேலையாக மாறிவிடும்.

தசாபுக்தி அந்தரங்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாக செயல்படும் தகுதி சந்திர சாரப்படி வளையவருகிற ஏழரை நாட்டுச் சனிக்கு இல்லை. சந்திர சாரப்படி தென்படுகிற கிரகம், தசாபுக்தி அந்தரங்களின் பலத்தை நிறைவேற்றவே ஒத்துழைக்கும். பிறக்கும்போது இணைந்த நட்சத்திரம், அவனது ஆயுள் முடியும் வரை சந்திக்க வேண்டிய தசாபுக்தி அந்தரங்களை வரிசையாகப் பட்டியலிட்டுத் தந்துவிடும்; கர்மவினைக்கு உகந்தபடி, இன்ப- துன்பங்களைச் சந்திக்கும் காலத்தையும் வரையறுத்துவிடும். சந்திரசாரப்படி மாறி வரும் அந்தந்த வேளையில், அந்தந்த ராசியில் தென்படும் கிரகங்களின் பலன்கள், தசாபுக்தி அந்தர பலன்களை முடக்கிவைக்க இயலாது. நொடிக்கு நொடி, மனித சிந்தனையில் மாற்றங்கள் நிகழந்துக்கொண்டே இருப்பதால், மனமாற்றத்துடன் இணைந்த கிரகங்கள், நிரந்தரப் பலனை அளிக்க இயலாது என்பதே உண்மை. நிச்சயமான பலனை அளிக்கவல்லது தசாபுக்தி அந்தரங்கள். தசையினால் திடமான பலத்தை அறியவேண்டும் என்கிறது ஜோதிடம் (விசிந்தயேத் த்ருடம்...). அஷ்டகவர்த்தை முன் வைத்து அதிருட பலத்தை அறியவேண்டும். நிச்சயமல்லாத, அதாவது சந்தர்ப்பம் இருந்தால் தென்படும் பலன்களை அறியவேண்டும் என்கிறது அது. யோகங்களால் இரண்டு வித பலன்களும் ஏற்படலாம். யோக பலம் செயல்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் விளக்கம் தருகிறது ஜோதிடம்.

சனியின் உச்ச - ஆச்சி - நீச்ச வீட்டு பலன்கள்

சனி உச்சம் பெற்று இருப்பவரானால், அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து, எல்லோருடைய பாராட்டையும் பெறுவார்கள். மனோதைரியம் அதிகமாகயிருக்கும். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பவர். இரும்பு யந்திர துறையில் நல்ல முன்னேற்றம் அடைவர். சனி ஆட்சி வீட்டில் இருந்தால் உல்லாசமான வாழ்க்கை வாழ்வார்கள். நல்ல தொழிலைப் பெற்றிருப்பர். வாகன யோகமுண்டு. பிரயாணத்தின் மூலம் நன்மை அடைவர். சனி நீச்ச வீட்டில் இருந்தால் சாஸ்திர, சம்பிரதாயத்தில் நம்பிக்கை இருக்காது. மனோவலிமை குறைந்தவர்களாகவும், சில தீய குணங்கள் கொண்டவர்களாவும் இருப்பர்.

சனியினால் ஏற்படும் யோகங்கள் பரிகாரங்கள்

சந்திரனுக்கு 9ல் சனி இருந்தால் அது சசியோகம் எனப்படும். இத்தகைய யோகம் அமையப் பெற்றவர்கள் பெரிய குடும்பத்தைப் பெற்றிருப்பர். நிறைய வருவாயும், அதற்கேற்ற செலவும் உடையவர்களாக இருப்பார்கள். சந்திரனுக்கு 2ல் சனியிருந்தால் அது சுனபாயோகம் எனப்படும். இத்தகைய ஜாதகர்களுக்கு பிதுர் வழியில் சொத்து அமையாவிடினும், சுயமாக சம்பாதித்து அரச போக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இவ்வாறு சனி பகவானால் சிற்சில சோதனைகள் ஏற்பட்டாலும், அதற்கேற்ப அவரவருடைய ஜாதகப்படி ப்ரீதிகளைச் செய்தால் நல்ல யோகங்களைப் பெறலாம்! நமக்கு மலையளவு ஏற்படக்கூடிய சோதனைகளை சனி பகவான் கடுகளவாக குறைத்து, செல்வத்தையும், ஐசுவரியத்தையும் வாரி வழங்கும் இயல்புடையவர். அவரை பிரார்த்தித்து அஷ்ட ஐசுவரியங்களையும் பெறுவோமாக!

ஜெனன ராசிக்கு 12-1-2ல் சனி சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டு காலம் - ஏழரை நாட்டு சனி என்று சொல்லப்படுகிறது. சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும், இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும், மூன்றாவது சுற்று மரணச் சனி என்றும் சொல்லப்படுகிறது. இக்காலங்களில் சனி பகவானுக்கு ப்ரீதி செய்வதன் மூலம் நன்மைப் பெறலாம். பொதுவாக ஜெனன லக்னத்திற்கு 3-6-11 ஆகிய ஸ்தானங்களில் சனி நின்றால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் அநேகம் நடைபெறும் என்று சொல்ப்படுகிறது. முதல் இடமாகிய லக்னத்தில் சனி நின்றால் அந்த ஜாதகர் தீர்க்க ஜீவனம் அமையப் பெற்றவர். உபாயம் அறிந்தவர். எதிலும் வெற்றி பெறக் கூடியவர். கண்டிப்பான வார்த்தை பேசுபவர். சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். புறம் பேசுபவர்.

இரண்டாமிடத்தில் இருந்தால் வாக்கு பலிதம் உடையவர். தர்க்கம் வாதம் செய்பவர். இத்தகைய அமைப்பு உடையவர்கள் பால்யத்திலேயே திருமணமானவர்களாயின், இரண்டாம் தாரம் அமையும் நிலையுண்டாகும். கண்ணால் பேசக்கூடிய கவர்ச்சியைப் பெற்றிருப்பர். மூன்றாமிடத்தில் இருந்தால் நல்ல தைரியம் உடையவர்களாக இருப்பர். தன்னைவிட தாழ்ந்தவர்களுடன் சிநேகமாக இருப்பார்கள். ஆசார அனுஷ்டானங்களை மதியாதவர்கள். இனஜன பந்துக்களை மதிக்காதவர்கள். இளைய சகோதரர்கள் மிகவும் உதவுவார்கள். நான்காமிடத்தில் இருந்தால் தாய்க்கு ஆகாது. வீடு, வாகனம் முதலியவைகளை அடையும் வாய்ப்பு குறைவு. இவர்கள் சகல சாஸ்திரங்களையும் கற்றவர்களாக இருப்பார்கள். இளமையிலேயே புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டாகும்.

ஐந்தாமிடத்தில் இருந்தால் பிதுர் தோஷமாகும். புத்திரர்களுக்கும் ஆகாது. இவர்கள் பிறரை பழி வாங்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் தொழிலில் போட்டியும், பொறாமையும் நிறைந்திருக்கும். ஆறாம் இடத்தில் இருந்தால் காது சற்று மந்தமாக இருக்கும். தனம், சம்பத்து முதலியவைகளைப் பெற்றிருப்பர். எந்த காரியத்திலும் முதலில் தோல்வி ஏற்பட்டாலும் இறுதியில் ஜெயம் உண்டாகும். இத்தகைய அமைப்புடையவர்கள் பகைவர்களை வெல்லும் திறமையுடையவர்கள். ஏழாமிடத்தில் இருந்தால் மனைவியினால் துன்பத்தை அநுபவிப்பவர். அதிகமான பொறுப்புகளை ஏற்று நடத்துவர். இனிமையாக பேசக் கூடியவர்கள்.

எட்டாமிடத்தில் இருந்தால் வாக்கு பலிதம் பெற்றிருப்பர். இவர்கள் கஷ்டப்பட்டு பொருள் சேர்ப்பர். சில தீய குணங்களும் அமைந்திருக்கும். ஆனால் இவர்கள் துணிவும் தைரியமும் நிரம்ப பெற்றிருப்பர். மூலம் போன்ற உஷ்ண நோயினால் பாதிக்கப்படுவார்கள். ஒன்பதாம் இடத்தில் சனி இருந்தால் தந்தைக்கு தோஷமுண்டாகும். இளமையிலேயே வறுமையால் துன்பப்படுவார்கள். இவர்கள் சகோதர வகையிலும் துன்பத்தைப் பெறுவார்கள். சிவபக்தி உடையவர்களாக இருப்பார்கள். பத்தாமிடத்தில் இருந்தால் தாய்க்கு ஆகாது. இவர்கள் எவரையும் எளிதில் நம்பி காரியத்தில் இறங்க மாட்டார்கள். ஆசார, அனுஷ்டானங்களை பின்பற்றுவார்கள். நல்ல விவேகம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாகன யோகமும் உண்டு.

பதினொன்றாம் இடத்தில் இருந்தால் நல்ல சாஸ்திரம் அறிந்தவராகவும், சிறந்த ஞானம் பெற்றவராகவும் இருப்பார். வாகன யோகமுண்டு. ஆயுள் விருத்தி உண்டாகும். இத்தகைய சனியுடன் புதனும் கூடியிருந்தால், கலைத் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பன்னிரண்டாம் இடத்தில் சனி இருந்தால் முன் கோபியாகவும், ஆரோக்கியம் குறைந்தும் இருப்பர். சனியும், அங்காரகன் எனப்படும் செவ்வாயும் கூடி இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் இரும்பு யந்திர துறையில் ஈடுபட்டிருப்பர். பட்டம் பெறும் வாய்ப்பும் பெறுவர். சனியும், சுக்கிரனும் கூடியிருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் சில நஷ்டங்களாலும், நோயினாலும் துன்பப்படுவார்கள். இவர்களிடம் சில தீய பழக்கங்கள் குடி கொண்டிருக்கும். சனியும், ராகுவும் கூடியிருந்தால் கலைத் துறையிலும், இரசாயன துறையிலும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

இதுவரை கன்னி ராசியில் இருந்த சனி பகவான் (21-12-2011) கர வருடம், மார்கழி மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை, நாழிகை 3.30 அளவில் (காலை 7.30) துலா ராசிக்கு - சித்திரை 3-ஆம் பாதத்தில் மாறுகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்கப்படி 21-12-2011-ல் தான் நடக்கிறது.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 15-11-2011 கர வருடம், ஐப்பசி மாதம் 29-ஆம் தேதி நாழிகை 10-11 விநாடிக்கு (காலை 10.05 மணி) அளவில் சனிப்பெயர்ச்சி என்று கணிக்கப்படுகிறது.

சனீஸ்வரருக்கு அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறுதான்! ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும், கேரளத்தில் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதிகாரப்பூர்வமான கோவில் என்பதுபோல திருநள்ளாறு கோவிலே சனீஸ்வரருக்கு உரிய திருத்தலம். அதனால் நாமும் சனிப்பெயர்ச்சி நாளாக 21-12-2011- ஆம் தேதியை எடுத்துக்கொள்வோம்.

மூன்று வருஷம் இருக்கப் போறார்!

புராதன நூலான அர்த்தசாஸ்திரம், நம் அன்றாட வாழ்வில் சனியின் பங்களிப்பு பற்றி விரிவாகக் கூறுகிறது. ஒருவரது வாழ்நாள், தொழில், வியாபாரம் அல்லது பணி ஆகியவற்றை நிர்ணயிப்பவர் இவர் தான். அதனால், இவருக்கு ஆயுள்காரகர், ஜீவனகாரகர் என்ற பெயர் உண்டு. ஜோதிடத்தில் சிறந்தவரான வராஹமிகிரர், சனீஸ்வரர் துன்பத்தை மட்டுமே தருபவர் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார். ஒருவரது ராசியில் இருந்து 3,6,11 ஆகிய இடங்களில், இவர் சஞ்சரிக்கும்போது அளவற்ற நன்மைகளைக் செய்வார். இதுதவிர, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஆயுள், ஆரோக்கியம், செய்யும் தொழில் ஆகியவற்றில் விசேஷபலன்களைத் தந்தருள்வார். பிதுர்களை வழிபடுவது இவருக்கு மிகவும் பிடித்தமானது. இவருடைய வாகனமான காகம் பிதுர்களின் அம்சமாகத் திகழ்கிறது.

சனீஸ்வரர் பொதுவாக ஒரு ராசியில் இரண்டே கால் முதல் இரண்டரை ஆண்டுகள் வரையே இருப்பார். ஆனால், இம்முறை அவருக்கு பிடித்த துலாம் வீட்டில் மூன்றாண்டுகள் வாசம் செய்ய உள்ளார். 2011 டிசம்பர் 21 முதல், 2014 டிசம்பர் 16 வரை இவர் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இதில் ஆறுமாத காலம் (2012 மார்ச் 26 முதல் செப்.10 வரை) வக்ரமாகி, மீண்டும் முந்தைய ராசிக்கே செல்வார். இந்த காலத்தில் நற்பலன் பெறுபவர்கள் கவனமாகவும், கெடுபலன் பெறுபவர்கள் மூச்சு விடுவதற்கும் வாய்ப்பு கொடுப்பார். இந்த காலகட்டத்தை அனைத்து ராசியினரும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்காக, ஒருவருக்கு பணக்கஷ்டம் என்றால், இந்த காலகட்டத்தில் சுதாரிப்பாக இருந்து, எதிர்காலத்தில் கஷ்டம் வரும் போது பயன்படுத்தும் அளவுக்கு சேமித்துக் கொள்ள வேண்டும். பணம் தாராளமாக கிடைக்கிறதே என செலவழித்து விட்டால், சிரமம் தான்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்கள் »
temple news
தலைமை நீதிபதி  சனி பகவான்: மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக ... மேலும்
 
temple news
நவகிரக மண்டலத்திலுள்ள சனிக் கோளின் வானவியல் ஆய்வு குரு கிரகத்துக்கு அடுத்து பெரிய கிரகம் சனி. இதன் ... மேலும்
 
temple news
சனிபகவானும், விநாயகரும்: ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் ... மேலும்
 
temple news
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைக் கூறுவதன் மூலம் சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம். சனீஸ்வர ... மேலும்
 
temple news
திருநள்ளாற்றுத் திருத்தலம்: செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளரும் சோழவள நாட்டிலே - காவிரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar