பதிவு செய்த நாள்
09
மே
2017
03:05
கோத்தகிரி: கோத்தகிரியில் மாரியம்மன் திருவிழாவை ஒட்டி, அம்மன் சூலாயுத பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் திருவிழா, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. நாள்தோறும் காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு அபஷேக மலர் வழிபாடு நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்து வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, நேற்று அம்மன் திருசூலாயுத பால்குட ஊர்வலம் நடந்தது.
காலை, 9:00 மணிக்கு, டானிங்டன் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மாரியம்மன் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில், திருசூலாயும் மற்றும்
பால்குடம் ஏந்தி, திரளான பெண்கள் பயபக்தியுடன் பங்கேற்றனர்.தொடர்ந்து, 11:00 மணிக்கு அபிஷேக மலர் வழிபாடு நிகழ்ச்சியை அடுத்து, பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்குஅன்னதானம்
வழங்கப்பட்டது.
மாலை, 6:00 மணிக்கு போயர் சமுதாய மக்களின் உபயத்தில், அம்மன் அன்னப்பட்சி வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருவீதி உலா, காம்பாய் கடை, பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம் மற்றும் ராம்சந்த் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.