பதிவு செய்த நாள்
09
மே
2017
03:05
கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிருங்கேரி சுவாமிகள், இன்று ஸ்ரீரங்கம் செல்கின்றனர். கர்நாடகா மாநிலம், சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள், கடந்த, 2012ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர், ஐந்து ஆண்டுகளுக்கு பின், இளையபட்டம் விதுசேகர பாரதி சுவாமிகளுடன், தற்போது தமிழகத்தில்
சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் கடந்த, 4 முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுவாமிகள், நேற்று மாலை, மகாதானபுரத்தில் நடந்த பூஜையில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்துக்கு இன்று (மே, 9) செல்கின்றனர். மாலையில், அம்மா மண்டபம் படித்துறை அருகே, உள்ளூர் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் சுவாமிகள் முகாமிடுகின்றனர். வரும், 13 வரை, சாரதா - சந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர். முகாம் நாட்களில், ஸ்ரீ ரங்கம், திருவானைக்காவல் போன்ற கோவில்களில் வழிபாடு நடத்த உள்ளனர்.