சிவனடியாரை தேடி வரும் சிவன் திருவாதவூரில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2017 12:05
மேலுார்: மதுரை திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக சிவாச்சாரியாரை சிவனே தேடி வந்ததை நினைவுபடுத்தும் மாங்கொட்டை திருவிழா ஜூன் 2ல் நடக்கிறது.மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடக்கும். விழாவையொட்டி நேற்று திருமறைநாதர் வேதநாயகி அம்பாளுடன் கோயிலை சுற்றி வலம் வந்து அருள் பாலித்தார். அதைதொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. மாலையில் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி கோயிலை சுற்றி வந்தார். முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுடன் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் ஜூன் 2ல் மேலுாரில் எழுந்தருளுகின்றனர். இது மாங்கொட்டை திருவிழாவாக கொண்டாடப்படும். ஜூன் 5ல் திருக்கல்யாணம், ஜூன் 6ல் தேரோட்டம் நடக்கிறது.சிவனடியாரை தேடி சிவன்ஆங்கிலேயர் காலத்தில் மேலுாரில் ஒரு சிவனடியார் இருந்தார். தினமும் 8 கி.மீ., தொலைவிலுள்ள
திருவாதவூருக்கு நடந்து சென்று சிவனை தரிசிப்பார். அவரது சீடராக தாசில்தார் இருந்தார். காலப்போக்கில் சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூர் செல்ல முடியவில்லை. அதனால் தாசில்தார் மேலுாரில் சிவலிங்கம் அமைத்து கொடுத்தார். ஆனாலும் அடியாருக்கு திருவாதவூர் செல்ல முடியாதது கவலையாக இருந்தது. சிவன், அடியார் கனவில் தோன்றி, ’நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன்’ எனக்கூறி, அங்கு எழுந்தருளியதாக புராண வரலாறு. விழாவில் மேலுார் தாசில்தாருக்கு இன்றும் முதல் மரியாதை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்துகண்ணன், இணை ஆணையர் நடராஜன், பேஸ்கர் பகவதி ஆகியோர் செய்துள்ளனர்.