பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
03:06
வால்பாறை: வால்பாறை ஐயப்பசுவாமி கோவிலின் மகாகும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், சிறிய அளவில் இருந்த ஐயப்பசுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் முகப்பு வாயிலில் நர்த்தனகணபதி, ஐயப்பசுவாமி, கருப்புசாமி, சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி கோவில் கட்டப்பட்டுள்ளது. விழாவில் நேற்று காலை, 5:00 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை, திருமறை பாராயணம் ஆகியவை நடந்தன. காலை, 7:00 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பக்தர்கள் எடுத்து, கோவிலை மூன்று முறை வலம் வந்தனர்.
பின் காலை, 8:30 மணிக்கு நர்த்தனகணபதி, ஐயப்பசுவாமி, கருப்புசாமி, சண்டிகேஸ்வரர், காலபைரவர் மற்றும் கொடிமரம் கோபுரகலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று சரணகோஷம் எழுப்பினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் செய்திருந்தனர்.