பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
03:06
சின்னமனுார்: கோவிந்தா கோஷம் முழங்க, சின்னஓவுலாபுரம் வனப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சண்முகாநதி அணையின் பின்புறம் 400 ஆண்டுகள் பழமையான வனப்பெருமாள் கோயில் உள்ளது. மலையடிவாரத்தையொட்டி அமைந்துள்ள நிலங்களுக்கு செல்லும் மக்கள் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதாக ஆன்மிக நம்பிக்கை கொண்ட கோயிலில் மகாலட்சுமியுடன் கூடிய வனப்பெருமாள், தும்பிக்கை ஆழ்வார், கருடன், அனுமன், கருப்பணசாமி, பைரவர், தர்மசாஸ்தா, மகாசக்திபீடம், சப்தகன்னிமார் ஆகிய பரிவார மூர்த்திகளுடன் அமைக்க புவனேந்திரன் தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. மகா கும்பாபிஷேகம்: 2ம்தேதி மகாலட்சுமி திருவிளக்கு பூஜையுடன் முதல்கால பூஜை துவங்கியது. மறுநாள் விஷ்வக்ஷேன, கணபதி, கோ, ஆச்சார்ய வருணம், அனுக்ஞை, யஜமான வருணம் புண்யாக வாஜனம், யாகசாலை பிவேசத்துடன் முதற்கால யாகசாலை பூஜை ஆரம்பமானது. இரவு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு சயனாதிவாசம், யந்த்ர பூஜை நடந்தது. நேற்று, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கருட பகவான் வானத்தில் வட்டமிட, கோவிந்தா கோஷத்துடம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. உபயதாரர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.