ஹரிஹரபுத்திர அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2017 11:06
மேலுார்: மேலுார் அருகே சாத்தமங்கலத்தில் ஹரிஹரபுத்திர அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் புரவி எடுப்பு திருவிழா நடக்கும். இதை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி கடும் விரதமிருந்தனர். மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடியின்றி எல்லா வளமும் பெற வேண்டியும் நேர்த்திக்கடனாக குதிரைகள் மற்றும் காளை உருவங்களை செய்து கோயிலுக்கு செலுத்தினர். இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று குதிரைகள் அனைத்தும் இ.மலம்பட்டியில் இருந்து 8கி.மீ., துாரம் சுமந்து வந்து சாத்தமங்கலம் மந்தையில் வைக்கப்பட்டது. இன்று மந்தையில் இருந்து கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவர். இத்திருவிழாவில் சாத்தமங்கலம், மீனாட்சிபுரம், அழகாபுரி, முத்துராமலிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.