குரு ஸ்தலமான குருவித்துறை கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2017 04:06
காடுபட்டி: குருவித்துறை பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குருவித்துறையில் உள்ள பழமை வாய்ந்த சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது.
சோழவந்தான் அருகே குருவித்துறை பழமை வாய்ந்த சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் உள்ளது. மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ மூர்த்தி சார்பாக புதிய ஐந்து நிலை கொண்ட 61 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது, குரு ஸ்தலாமான இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்க்கான 65 சிவச்சாரியர்கள் பங்கேற்ற யாகசாலை பூஜைகள் ஜீன் 12ம் தேதி மாலை துவங்கியது. இன்று(ஜுன்., 14ல்) அதிகாலை 4.00 மணிக்கு நான்காம்கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி வலம்வந்த பின்னர் 6.38 மணிக்கு ராஜகோபுரம் மீது அமைக்கப்பட்டுள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டதை தொடர்ந்து மற்ற உப சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மூலவர், செண்பகவல்லி தாயார், குருபகவான், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், செயல் அலுவலர் சக்கரையம்மாள். முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, தெற்கு மாவட்ட செயலாளர் மனிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.