பதிவு செய்த நாள்
24
ஜூன்
2017
12:06
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், தங்கத்தேர் செய்யும் திருப்பணிக்கு, போதுமான தங்கம் கிடைக்காததால், தேர் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், மிகவும் பழமையானது ஏகாம்பரநாதர் கோவில். இக்கோவில், 23 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மரத்தேர், வெள்ளித் தேர் மட்டுமே உள்ளது. தங்க தேர் இல்லை.இதனால், 2014ல், ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், பக்தர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன், 24 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட தங்கத்தேர் செய்ய திட்டமிடப்பட்டது.
மொத்தம், 32 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி, 1,500 கிலோ செப்புத் தகடு என, மொத்தம், 12 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், திருப்பணியை துவக்கி வைத்தார். மரத்தேர் செய்யப்பட்டு, அதில், செப்புத் தகடும் பொருத்தப்பட்டது.தற்போது, செப்புத்தகடின் மீது, தங்கத் தகடு பொருத்த, 5 கிலோ தங்கம் மட்டுமே நன்கொடையாக வந்துள்ளது. அதை வைத்து சிறு, சிறு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும், 27 கிலோ தங்கம் கிடைத்தால் மட்டுமே, தங்கத்தேர் திருப்பணி நிறைவு பெறும் என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
திருஷ்டி விலக பூசணிக்காய் உடைப்பு: கடந்த, 2014ல் துவங்கிய திருப்பணி, 2015ல் பெய்த, கனமழை காரணமாக தடைபட்டது. 2016ல், ’வர்தா’ புயலின் போது மீண்டும் பணி பாதிக்கப்பட்டது. தற்போது, போதுமான தங்கம் கிடைக்காததால், பணி பாதியில் நிற்கும் நிலை உள்ளது. இதனால், தடங்கல் ஏதுமின்றி, போதுமான தங்கம் கிடைத்து, தங்கத்தேர் திருப்பணி முழுமைபெற, அமாவாசையான நேற்று, தேருக்கு திருஷ்டி கழிக்க, பூசணிக்காய் உடைக்கப் பட்டது. மலேஷியாவில் இருந்து, தேக்கு, வேங்கை மரம் வாங்கப்பட்டது. மாமல்லபுரம் ஸ்தபதி ரமேஷ் தலைமையில், மரத்தேர் செய்யும் பணி முடிந்து, 2015ல் வெள்ளோட்டம் நடந்தது. அதன் பின், கும்பகோணம் பிரபாகரன், சரவணன் தலைமையில், செப்புத்தகடு பொருத்தும் பணி நடந்தது. தற்போது, காஞ்சிபுரம் தமீம் தலைமையில், தங்கத்தகடு பொருத்தும் பணி நடந்து வருகிறது. பக்தர்களிடமிருந்து போதுமான தங்கம் கிடைத்தால், வரும் செப்டம்பருக்குள், திருப்பணி முழுமை பெறும். எம்.என்.நாகராஜ் ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை உறுப்பினர், காஞ்சிபுரம்