பதிவு செய்த நாள்
26
ஜூன்
2017
12:06
திருப்பூர் : திருப்பூர் அருகே, புலி குத்திக்கல் மூலவராக கொண்டு கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு, நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையான, தென்சேரிமலை அருகே, எஸ். குமாரபாளையத்தில், 17ம் நூற்றாண்டை சேர்ந்த, தமிழ் எழுத்துக்களுடன் கூடிய புலி குத்திக்கல்லை, திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்தனர். இது, கால்நடைகளை காக்கும் வகையில், புலிகளுடன் சண்டையிட்டு, வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் ஆகும். கண்டறிப்பட்ட புலி குத்திகல்களில், சிறப்பானதாக, தமிழில் மூன்று வரிகளை கொண்ட செய்தியாக, "புலி குத்தி பொடாரப்ப கவுண்டன் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நடுகல்லில் வீரனின் தலை நேராகவும், வீரனின் வலது கையில், வாளால் புலியின் வயிற்று பகுதியை குத்தும் நிலையிலும், இடது கையை மடக்கி, பாயும் புலியை தடுக்கும் நிலையிலும் அமைக்கப்பட்டிருந்தது.
வீரனின் கை மற்றும் கால் பகுதியில், வீர காப்பும், மார்பு பகுதியில் அணிகலன்களும், இடையில் வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை, புலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில், வீரனை தாக்கும் வகையில் உள்ளது. பின்னங்கால், நிலத்தில் ஊன்றியபடி தத்ரூபமான புடைப்பு சிற்பமாக இது உள்ளது. இதை காக்கும் வகையில், கிராம மக்கள் இணைந்து, தற்போது கோவில் கட்டியுள்ளனர். புலி குத்திக்கல் கோவில் கும்பாபிஷேக, யாக சாலை பூஜைகள் இன்று துவங்குகிறது. இன்று மாலை, 4:00க்கு, முதற்கால யாக பூஜையும்; நாளை காலை, 5:00க்கு, இரண்டாம் கால யாக பூஜையும்; காலை, 6:00 முதல் 7:00க்குள், கோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.