பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
01:06
சென்னை: தமிழகம் முழுவதும், ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினர். பள்ளிவாசல்கள், பொது இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. ரம்ஜான் மாதத்தில், முஸ்லிம்கள், 30 நாட்கள் நோன்பிருந்து, இறைவனை வழிபடுவர். நோன்பு முடியும் நாளில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இதன்படி, நேற்று ரம்ஜான் பண்டிகையை, முஸ்லிம்கள் கொண்டாடினர். இதையொட்டி, சென்னை, மண்ணடியில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில், த.மு.மு.க., சார்பில், ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. பகுதி செயலர், எம்.இ.மீரான் தலைமையில் நடந்த விழாவில், பேராசிரியர் ஜவாஹிருல்லா, மூத்த தலைவர் ஹைதர் அலி உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், பெண்களும் அதிக அளவில் பங்கேற்றனர்.சென்னை திருவல்லிக்கேணி, பெரியமேடு, மண்ணடி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் மட்டுமின்றி, தீவுத்திடல், பள்ளி வளாகங்கள் என, பல பொது இடங்களிலும், சிறப்பு தொழுகைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், தங்கள் குழந்தைகளுடன், புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறியவர் முதல், பெரியவர் வரை, ஒவ்வொருவரும், ஆரத்தழுவி, தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். தொழுகை முடிவில், முஸ்லிம் குருமார்கள், உரை நிகழ்த்தினர். ஏழைகளுக்கு புத்தாடை, உணவு, பணம் உள்ளிட்ட உதவிகளை, முஸ்லிம்கள் வழங்கினர். உறவினர்களுக்கு மட்டுமின்றி, இந்து, கிறிஸ்தவ நண்பர்களுக்கும் பிரியாணி விருந்து படைத்தனர். தமிழகம் முழுவதும், இது போன்று சிறப்பு தொழுகைகள் நடந்தன.