பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
03:06
சபரிமலை: சபரிமலை கொடிமரத்தில் பாதரசம் ஊற்றி சேதப்படுத்திய ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் சதித்திட்டம் இல்லை என்ற முடிவுக்கு கேரள போலீசார் வந்துள்ளனர். சபரிமலை கொடிமரத்தை சேதப்படுத்திய 5 பேர் கோர்ட்டில் ஆஜர் சதித்திட்டம் இல்லை என கேரள போலீஸ் முடிவு சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் நிறுவப்பட்டு நேற்று முன்தினம் பிரதிஷ்டை நடைபெற்றது. இது முடிந்ததும் ஏராளமான பக்தர்கள் கொடி மர பீடத்தை தொட்டு வணங்கினர். இந்த நேரத்தில் யாரோ பீடத்தில் பாதரசத்தை ஊற்றினர். இதனால் அந்த பகுதியில் தங்கத்தின் நிறம் மாறியது. இதை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பம்பையில் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
போலீசார் விசாரணை: அப்போது பம்பையில் இருந்து செங்கன்னுார் சென்று கொண்டிருந்த பஸ்சில் சிலரது கையில் வெள்ளை தழும்புகள் இருந்ததை கண்டு போலீசார் அவர்களை பிடித்தனர். அவர்களிடம் பம்பைபோலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம், காவேரியை சேர்ந்த வெங்கட்ரான், 38, சவுத்ரி, 25, சத்தியநாராயணரெட்டி, 50, சுதாகரரெட்டி, 48, உமாமகேஸ்வரரெட்டி என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவே இவர்கள் பத்தணந்திட்டை ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் பத்தணந்திட்டை எஸ்.பி., சதீஷ்பினோ விசாரணை நடத்தினார். நேற்று காலை, ஐ.ஜி., மனோஜ் ஆபிரகாம் விசாரணை நடத்தினார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்: இதன் முடிவில்சம்பவத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு போலீஸ் வந்துள்ளதாக தெரிகிறது.ஆந்திர மாநில கோயில்களில் கொடிமர பிரதிஷ்டையின்போது பாதரசம் போன்ற சில பொருள்களை போட்டு வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்ய கேரள போலீசார் ஆந்திர போலீசாரை தொடர்பு கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நேற்று ரான்னி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அத்தாழ பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டதும், கொடிமரத்தின் சேதப்படுத்தப்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டது. பின்னர் பாலீஷ் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டது.தந்திரி கண்டரரு ராஜீவரரு சுத்திகலசம் நடத்தினார். 28-ம் தேதி கொடியேற்றுக்கு முன்னர் மீண்டும் ஒரு கலசபூஜை நடத்தப்படும் என அவர் கூறினார்.