நமது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டோமானால் கண்டிப்பாக ஏதாவது ஒரு நிகழ்வுகளின் மூலம் குலதெய்வத்தை அறியலாம். பொதுவாக அனைத்துக் குடும்பங்களிலும் தனது குழந்தைக்கு முதலில் முடியைக் கொடுப்பது குலதெய்வத்தின் கோயிலில்தான். தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறியலாம். இந்தத் தகவல்களைத் தங்களால் இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.