பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
12:07
திருவள்ளூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 9:30 மணிக்கு ஆண்டாளுக்கு திருமஞ்சனமும், மாலை உற்சவருடன் ஆண்டாள் நான்கு வீதி புறப்பாடும் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்பட்டது.
தேர் வீதி உலா: பூங்கா நகரில் உள்ள சிவ - விஷ்ணு கோவிலில், பூங்குழலி அம்மன், பத்மாவதி தாயார், கன்னிகா பரமேஸ்வரி மற்றும் ஜலநாராயணி தாயார் ஆகியோருக்கு, ஒரு லட்சம் வளையல் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவு திருத்தேர் உலா நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில் திரிபுர சுந்தரி அம்மனுக்கு, வளையல் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. கொண்டமாபுரம் கன்யா பரமேஸ்வரி கோவிலில், வாசவி அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடந்தது. மணவாள நகர் நால்வர் திருமடத்தில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை, சிவகாம சுந்தரிக்கு வளையல் காப்பு, மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. புதிய திருப்பாச்சூர் காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவிலில் வாராகி நவராத்திரி விழா நடந்தது.
பெண்கள் கூட்டம்: தேவி மீனாட்சி நகர், காரிய சித்தி விநாயகர் கோவிலில் உள்ள அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரம் நடந்தது. திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவில், பெரியகுப்பம் மூங்காத்தம்மன் கோவில் உட்பட நகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலை மோதியது.